மதுரையில் ஆடிட்டர்–மனைவியை தாக்கி நகைகள் கொள்ளை!!
மதுரை திருப்பாலை சண்முகாநகரில் வசிப்பவர் சந்தைவிளையான் (வயது60). இவர் கூட்டுறவு துறையில் தணிக்கை அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தனலட்சுமி.
இவர்களது வீட்டிற்கு நேற்று பேரன்கள் மற்றும் பலர் வந்திருந்தனர். அவர்கள் ஒரு அறையில் படுத்து தூங்க, சந்தைவிளையானும், தனலட்சுமியும் வேறு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
இன்று அதிகாலை அவர்களது வீட்டின் கதவு தட்டப்படுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு சந்தைவிளையான் எழுந்து வந்தார். அப்போது வீட்டிற்குள் 2 மர்ம மனிதர்கள் முகமூடி அணிந்து நிற்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்துள்ளனர். மேலும் வீட்டின் வெளியேயும் 2 பேர் முகமூடி அணிந்து நின்றுள்ளனர். அவர்களை கண்டதும் சந்தைவிளையான் சத்தம்போட தொடங்கினார்.
ஆனால் வீட்டிற்குள் நுழைந்த 2 வாலிபர்களும் அவரை தாக்க தொடங்கினர். சந்தைவிளையானின் அலறல் சத்தம் கேட்டு தனலட்சுமியும் எழுந்து வந்துள்ளார்.
அவரையும் தாக்கிய முகமூடி கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். மேலும் சந்தைவிளையான் கை விரலில் அணிந்திருந்த 4 பவுன் மோதிரத்தையும் பறித்துக்கொண்டனர்.
இதற்கிடையில் சந்தை விளையானின் பேரன்கள் சத்தம் கேட்டு அடுத்த அறையில் இருந்து வரத்தொடங்கினர். இதனை கண்ட முகமூடி கொள்ளையர்கள் வீட்டை விட்டு வெளியேறி காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
அதிகாலையில் நகரின் முக்கியமான பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் கைரேகைகளை பதிவு செய்தனர்.
முகமூடி கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த சந்தைவிளையான், அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Average Rating