லண்டன் தொடர் குண்டுவெடிப்பில் காரணம் சரி, செய்த காரியம்….
லண்டனில் கடந்த ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தவறானது என்று இங்கிலாந்து முஸ்லிம்களில் 13 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ள வேளையில், அவர்களது செய்கை “நியாயமான காரணத்தால்’ தூண்டிவிடப்பட்டுள்ளது என்று ஒரு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி டைம்ஸ் மற்றும் ஐடிவி செய்தி நிறுவனம் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில், 13 சதவிகித முஸ்லிம்கள் ( ஏறக்குறைய 1.5 லட்சம் இளைஞர்கள்) குண்டுவெடிப்பு தவறானது; ஆனால் அதற்கான காரணம் சரியானது என்று கூறியுள்ளனர்.
சென்ற ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி பேருந்துகளில் குழாய்குண்டுகளை வைத்து தொடர் குண்டுவெடிப்பை நடத்தியவர்களைத் “தியாகி’களாகக் கருத வேண்டும் என்று இங்கிலாந்து முஸ்லிம்களில் 13 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், இத்தாக்குதலை நடத்திய தங்கள் மதத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிக்கும் மேற்பட்டோர், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என்று குறைகூறியுள்ளனர். மசூதிகளில் போதிக்கப்படும் விஷயங்களை அதிகாரிகள் கண்காணிப்பது ஏற்புடையதுதான் என்று 49 சதவீத முஸ்லிம்கள் குறிப்பிட்டுள்ளனர்.