கோபியில் பெண் கொலை: செய்வினை வைத்ததால் கொன்றேன்-கைதான கூலித்தொழிலாளி வாக்குமூலம்!!
கோபி புகழேந்தி வீதியை சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மனைவி பழனியம்மாள் (வயது 60). கூலி வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் காளியப்பன் (74). உறவினர்களாக இருந்தாலும் இவர்களின் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இது முன் விரோதமாகவும் மாறியது.
இந்த நிலையில் நேற்று காலை பழனியம்மாள் கூலி வேலைக்கு சென்ற போது கோபி தடப்பள்ளி வாய்க்கால் கரையோரம் காளியப்பன் அவரை வெட்டி கொலை செய்தார். பழனியம்மாளை காளியப்பன் கடும் ஆத்திரத்தில் ஓட…ஓட… விரட்டி உடலில் பல இடங்களில் அரிவாளால் வெட்டி சாய்த்து படுகொலை செய்தார்.
இந்த முதிய வயதில் அவர் இப்படி கடும் ஆவேசத்தில் பெண்ணை வெட்டி கொன்ற சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கைது செய்யப்பட்ட முதியவர் காளியப்பன் கோபி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட்டு ராணி அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையொட்டி அவர் கோபி மாவட்ட சிறையில் நேற்று இரவு அடைக்கப்பட்டார்.
முன்னதாக முதியவர் காளியப்பன் போலீசில் பழனியம்மாளை வெட்டி கொலை செய்தது ஏன்? என்பது குறித்து வாக்கு மூலம் அளித்தார். அவர் கூறியதாவது:–
பழனியம்மாளின் மகள் மகேஸ்வரியை தயிர் பாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். தங்கவேலின் தம்பிக்கு என் (காளியப்பன்) மகள் காந்தாமணியை திருமணம் செய்து கொடுத்திருந்தேன்.
இவர்களுக்கு சொந்தமான 2 சென்ட் இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். என் மகள் காந்தாமணிக்கு குழந்தை கிடையாது. இந்த நிலையில் எனக்கும் பழனியம்மாளுக்கும் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது.
இதனால் நான் என் மகள் காந்தாமணி வீட்டுக்கு அடிக்கடி போவதை நிறுத்தி விட்டேன்.
மேலும் என் மகளுக்கு குழந்தை பிறக்கக்கூடாது என பழனியம்மாள் திட்டம் தீட்டினார். இதற்காக செய்வினை வைத்தார். செய்வினை செய்த எலுமிச்சை பழங்களை வீட்டின் வாசல்படி அருகே வைத்ததை நான் பார்த்து விட்டேன். இதனால் கடும் ஆத்திரம் கொண்டேன்.
என் மகளை வாழ விடாமல் இடைஞ்சல் செய்து வந்த பழனியம்மாளை கொலை செய்ய முடிவு செய்தேன். என் திட்டப்படி அவர் கூலி வேலைக்கு சென்ற போது பின்னால் சென்று அவரை விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்தேன்.
இவ்வாறு காளியப்பன் கூறினார்.
Average Rating