சுரண்டை அருகே பன்றிக்காய்ச்சல் பீதியில் குடும்பத்துடன் விஷம் குடித்த தொழிலாளி சாவு!!
சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தை அடுத்த கள்ளம்புளியை சேர்ந்தவர் கணக்கநாடார் (வயது 50) இவரது மனைவி சூரியகாந்தி (47), மகன் சுடலைகனி (16). கணக்கநாடார் கூலி வேலை செய்து வந்தார். மகன் சுடலைகனி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.
கணக்கநாடாருக்கு திருமணமாகி 15 ஆண்டுக்கு பின்னரே சுடலைகனி பிறந்துள்ளான். இதனால் மகன் மீது கணக்கநாடார், சூரியகாந்தி ஆகியோர் அதிக பாசம் காட்டி வளர்த்து வந்தனர். இந்த நிலையில் சுடலைகனிக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் அவனுக்கு பல இடங்களில் வைத்தியம் பார்த்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுடலைகனிக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனைகளில் காண்பித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் அப்பகுதியினர் இது பன்றிக்காய்ச்சலாக இருக்கும் என கூறினர். இது கணக்கநாடார், சூரியகாந்திக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர்.
இன்று காலை 3 பேரும் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கணக்கநாடார் பரிதாபமாக இறந்தார். சூரியகாந்திக்கும், சுடலைகனிக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளை. அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்த சம்பவம் சுரண்டை, சேர்ந்தமரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஷம் குடித்த சுடலைகனி இன்று தொடங்கிய 10-ம் வகுப்பு தேர்வு எழுத செல்ல இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating