கொடைக்கானலில் மகளின் கள்ளக்காதலுக்கு உடந்தை: மாமியாரை வெட்டி கொன்ற மருமகன் தலைமறைவு!!
கொடைக்கானல் அருகில் உள்ள அட்டுவம்பட்டியை சேர்ந்தவர் அன்பு என்ற அன்பழகன் (வயது30), கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும் பர்ன்சில்ரோட்டில் வசிக்கும் ஜெயராஜ் மகள் எஸ்தர்(27) என்பவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்றரை வயதில் சவுத்ஜெனியா என்ற மகள் உள்ளார்.
குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்–மனைவி இருவரும் கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எஸ்தர் தனது தாயார் ஷீலா(45) பராமரிப்பில் தனது குழந்தையுடன் வசித்து வந்தார். எஸ்தர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
ஷீலா வீட்டு மாடியில் அந்தோணி என்ற வாலிபர் குடியிருந்து வந்தார். போட்டோகிராபராக வேலைபார்த்து வரும் அவருக்கும், எஸ்தருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்த விபரம் அன்புக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்தார்.
ஆனால் அந்தோணியோ உன்னையே பிடிக்கவில்லை என்றுதான் தனியாக எஸ்தர் வசிக்கிறார். அவர் யாரிடம் பேசினால் உனக்கென்ன என்று ஏளனமாக பேசினார். மேலும் தனது மனைவியிடம் நீ என்னுடன் சேர்ந்து வாழவேண்டும் இல்லையெனில் அந்தோணியை வீட்டைவிட்டு காலிசெய்ய வேண்டும் என்று கூறிவந்தார்.
நேற்று மாலை இதுதொடர்பாக தனது மனைவியிடம் பேசுவதற்காக பள்ளிக்கு சென்றார். பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த எஸ்தர் தனது கணவரை கண்டுகொள்ளவில்லை. அந்த நேரத்தில் எஸ்தரின் தாயார் ஷீலா அங்கு வந்து நீ ஏன் என் மகளை பார்க்க வருகிறாய் என்று சத்தம் போட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அன்பு எல்லாவற்றிற்கும் நீ உடந்தையாக இருந்துகொண்டு எதுவும் தெரியாதது போல நடிக்கிறாயா என்று கூறிக்கொண்டு அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதனை தடுக்க வந்த எஸ்தரையும் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ஷீலா பரிதாபமாக உயிரிழந்தார். குடல் சரிந்த நிலையில் உயிருக்கு போராடிய எஸ்தரை கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்குபின் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவர் அன்புவை தேடி வருகின்றனர்.
Average Rating