திருமுல்லைவாயலில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் சாவு!!
திருமுல்லைவாயல் ரவீந்திரன் நகர், 2-வது தெருவில் வசிப்பவர் ஜான்சன் (வயது 28). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (24). இவர்களுக்கு கடந்த 4-9-2014 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது விஜயலட்சுமிக்கு அவரது பெற்றோர் போட்ட நகைகளை ஜான்சன் மற்றும் அவரது தாயார் மகாலட்சுமி ஆகியோர் குடும்ப கஷ்டத்துக்காக அடமானம் வைத்து விட்டதாக தெரிகிறது. அந்த நகைகளை மீட்டு தரும்படி விஜயலட்சுமி, தனது மாமியாரிடம் அடிக்கடி கேட்டு வந்தார்.
இதுபற்றி தனது பெற்றோர் வீட்டுக்கும் சென்று கூறினார். அவர்கள் மகளை சமாதானப்படுத்தி கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் விஜயலட்சுமி, தனது பெற்றோர் தனக்கு போட்ட நகைகளை தான் போட்டு அனுபவிக்க முடியவில்லையே என்ற மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது விஜயலட்சுமி, மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரில் வசிக்கும் விஜயலட்சுமியின் தந்தை ஏழுமலை (60) திருமுல்லைவாயல் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் அவர், “எனது மகளின் சாவில் சந்தேகம் இருக்கிறது. எனவே எனது மகளின் கணவர் மற்றும் மாமியார் ஆகியோரை பிடித்து விசாரிக்க வேண்டும்” என கூறி இருந்தார்.
அதன்பேரில் ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் கெங்கைராஜ், இதுகுறித்து விசாரித்து வருகிறார். மேலும் ஜான்சன்-விஜயலட்சுமி இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் இதுபற்றி அம்பத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating