திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை!!
திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு மனைவி மற்றும் 1 மகன் உள்ளார். இன்று காலை பாண்டி அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் அவரது வீட்டின் முன்பு கிடந்தார்.
அதிகாலையில் பால்காரர் வந்துபார்த்தபோது பாண்டி ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அதிர்ச்சியடைந்த உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் பாண்டியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த வீரபாண்டி போலீசார் பாண்டி கொலையானது எப்படி? முன் விரோதம் காரணமா? அல்லது குடும்பத்தகராறு காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாண்டி மீது நல்லூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது அதன் காரணமாக கொலை நடந்துள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating