பாலியல் புகாருக்கு ஆளான பச்சோரிக்கு மீண்டும் முன் ஜாமின்: போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தல்!!
ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பு டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருந்த ராஜேந்திர பச்சோரி, அலுவலகத்தில் உள்ள ஒரு பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி டெல்லி அதிகாரிகள் அவர் மீது கடந்த மாதம் 24-ந்தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
தன் மீதான பாலியல் புகார்களை பச்சோரி மறுத்து உள்ளார். அவரை கைது செய்ய டெல்லி போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். போலீசார் விசாரணைக்காக அவருக்கு நோட்டீசு அனுப்பினர். இந்த நிலையில் கைது செய்வதில் இருந்து தப்பிக்க டெல்லி ஐகோர்ட்டில் கைதுக்கு எதிரான முன் ஜாமின் பெற்றிருந்தார். இதற்கிடையே, உடல் நிலை பாதிக்கப்பட்டதாக ஆஸ்பத்திரியில் சேர்ந்த பச்சோரி, சில நாட்களுக்கு முன்னர் டிஸ்சார்ஜ் ஆனார்.
அவரது முன் ஜாமினுக்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் அவரது வக்கீல் மேலும் ஒரு முன் ஜாமின் மனுவினை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது, போலீஸ் விசாரணைக்கு பச்சோரி சரியாக ஒத்துழைப்பதில்லை. எனவே, அவருக்கு மீண்டும் முன் ஜாமின் வழங்க கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாத நீதிபதி, பச்சோரிக்கு இன்றும் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அவருக்கு ஏற்கனவே விதித்திருந்த நிபந்தனைகள் ஏதும் தளர்த்தப்படவில்லை என குறிப்பிட்ட நீதிபதி, போலீசாரின் விசாரணைக்கு அவர் சரியான முறையில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ராஜேந்திர பச்சோரி 2007-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை அமெரிக்க துணை அதிபர் அல் கோருடன் பகிர்ந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating