கலப்பு திருமணம் செய்த தனியார் இன்சூரன்சு அதிகாரி படுகொலை!!
கரூர் நகர எல்கைக்குட்பட்ட திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் நேற்று இரவு சுமார் 25 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கரூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சப்–இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த அந்த வாலிபர் ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள ஆலாங்காளிபாளையம் பகுதியை சேர்ந்த வெள்ளயங்கிரி என்பவரது மகன் மூர்த்தி (வயது 28) என்பதும், அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் இன்சூரன்சு நிறுவனத்தில் வளர்ச்சி அதிகாரியாக பணி புரிந்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் அவர் நேற்று கரூரில் உள்ள அவர் பணி புரியும் நிறுவனத்தில் கிளை அலுவலகத்துக்கு வந்து பணிகளை முடித்து விட்டு அங்கிருந்து ஈரோட்டுக்கு புறப்பட்டவர். முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், மூர்த்தி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரது சொந்த ஊரைச் சேர்ந்த சுதா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததும், அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சுதாவின் பெற்றோர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் இருவரும் அதையும் மீறி திருமணம் செய்ததும், தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது.
இதனால் சுதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு தற்போது எழுந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating