ஜார்க்கண்டில் 10 ஆண்டுகளில் 4000 குழந்தைகள் கடத்தல்: தட்டிக்கேட்க நான் கடவுள் திரைப்பட பாணியில் அகோரி வருவாரா?
கடந்த 10 ஆண்டுகளில் 4000 குழந்தைகள் கடத்தப்பட்டதன் மூலம், இந்தியாவின் குழந்தைகள் கடத்தல் மையமாக ஜார்க்கண்ட் மாநிலம் விளங்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அம்மாநிலத்தில் உள்ள பழங்குடியின பெண் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் என ஆயிரக்கணக்கானோர் டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு கடத்தப்பட்டுள்ளனர். இப்படி கடந்த 10 ஆண்டுகளில் 4000 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ள நிலையில், 1000 குழந்தைகளை தொடர்ந்து தேடி வருவதும் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வேலைக்காக பல்வேறு பெண் குழந்தைகள் கடத்தப்பட்ட போதும், பாலியல் உறவுக்காகவும் குழந்தைகள் அதிகமாக கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இப்படித்தான் 14 வயது பெண் குழந்தை ஒன்றை ஜார்க்கண்டில் உள்ள குந்தியில் இருந்து கடத்தியவர்கள், அக்குழந்தையை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்ரூரை சேர்ந்த 55 வயது நிரம்பிய முதியவருக்கு மணப்பெண்ணாக 1 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளனர்.
சொந்த கிராமத்தை சேர்ந்த பெண்ணாலேயே, ஊரைச்சுற்றி பார்க்கலாம் என அழைத்து செல்லப்பட்டு, அப்பெண் குழந்தை விற்கப்பட்டாள். ஒரு வழியாக அந்த முதியவரிடமிருந்து தப்பித்து தனது சொந்த ஊருக்கு திரும்பிய அக்குழந்தை நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறிய போது தான், கடத்திய பெண்ணின் சுயரூபம் வெளிப்பட்டது. இதையடுத்து அப்பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இப்படி பல குழந்தைகள் காணாமல் போன நிலையில், குந்தி பகுதிக்கு துணை காவல் ஆய்வாளராக வந்த ஆராதனா சிங், துணிச்சலாக செயல்பட்டு 20 மிகப்பெரிய கடத்தல்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். இதில் 20,000 பெண் குழந்தைகளை கடத்திய பன்னா லால் மஹ்தோ என்ற கொடியவனையும் அவர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கைது குறித்து ஆராதனா கூறுகையில், வெறும் கைது மட்டுமே தீர்வை தராது. அவனுடைய வலையில் ஏகப்பட்ட ஏஜெண்டுகள் உள்ளனர். அவற்றையெல்லாம் களைவதால் மட்டுமே குழந்தைகள் கடத்தலை தடுக்கமுடியும் என கூறினார். தட்டிக்கேட்க ஆளில்லாமல் தவிக்கும் பழங்குடியினருக்கு ஆறுதலாக, நான் கடவுள் படத்தில் வருவது போல் ‘அகோரி’ யாராவது வரமாட்டார்களா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Average Rating