நாகர்கோவிலில் தேர்வு அறையில் மயங்கி விழுந்த பிளஸ்–2 மாணவி!!
பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு வேதியியல் தேர்வு இன்று நடந்தது. தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேரேகால்புதூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர்.
காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் தனியார் பள்ளி மாணவி சரஸ்வதிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தேர்வு அறையின் கண்காணிப்பாளர் இதை பார்த்து பதறிப்போனார். அவர் அருகில் செல்லும் முன்பு மாணவி மயங்கி கீழே விழுந்தார்.
உடனே தேர்வு கண்காணிப்பாளர் இதுபற்றி முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு தெரிவித்தார். அவர் உடனடியாக அந்த பகுதியின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்து பள்ளிக்கு விரைந்து சென்று மாணவிக்கு சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து பெண் டாக்டர் உள்பட டாக்டர்கள் குழு தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விரைந்தனர். அவர்கள் மயங்கி விழுந்த மாணவி சரஸ்வதிக்கு அவசர சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். சுமார் ஒரு மணி நேரம் கடந்த பின்பு அவர் தேர்வு எழுத விரும்புவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதையடுத்து முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் அந்த மாணவி மட்டும் ஒரு மணி நேரம் கூடுதலாக தேர்வு எழுத ஏற்பாடு செய்தார். அதன்படி மாணவியும் தேர்வு எழுதினார்.
Average Rating