நீதிபதி வீட்டுமுன்பு போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கைதிகள்: மைனா படபாணியில் ஓட்டம்!!
வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி, சப்–இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் கணியம்பாடி ஜார்தான்கொல்லை காட்டுப்பகுதியில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பேர் கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் (வயது 23), வெங்கடேசன் (24) என்பது தெரிய வந்தது. அதன்பின்பு இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டிற்கு பின்புறம் உள்ள மாஜிஸ்திரேட்டு முன்பு அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க 2 போலீசார் அழைத்து சென்றனர்.
மாஜிஸ்திரேட்டு வீட்டின் முன்பு ஆட்டோவில் இருந்து இறங்கியபோது கைதான இருவரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். அப்போது அவர்களின் கைகளில் விலங்கு (சங்கிலி) போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசை தாக்கி விட்டு தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க நேற்று நள்ளிரவில் 15–க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு 8.30 மணிக்கு தொடங்கிய தேடுதல் வேட்டை நள்ளிரவு வரை நீடித்தது.
வேலூர் புதிய பஸ் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு இடைப்பட்ட சர்வீஸ் ரோட்டில் சாமிநாதன் சுற்றித் திரிந்துள்ளார். அவரை கண்டதும், போலீசார் பிடிக்க முயற்சி செய்தனர். உடனே சாமிநாதன் தப்பி ஓடினான். போலீசார் அவனை விரட்டி பிடித்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள வெங்கடேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைதிகள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 10 நாளில் திருமணம் நடைபெற உள்ளது. மைனா சினிமா பட பாணிபோல திருமணத்துக்காக இவர்கள் தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
மாஜிஸ்திரேட்டு வீட்டின் முன்பு கைதிகள் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating