டெல்லியில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்திருந்த தையலக மேனேஜர் கைது!!
டெல்லியின் லஜ்பத் நகர் பகுதியில் பெண்களுக்கான பிரத்யேக தையற்கடை ஒன்றுள்ளது. இங்கு நேற்று வந்த ஒரு பெண் வாடிக்கையாளர் தனக்காக தைக்கப்பட்ட உடை உடலுக்கு பொருத்தமாக இருக்கின்றதா? என்பதை சரிபார்ப்பதற்காக கடையின் உள்பகுதிக்குள் உள்ள உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தார்.
பழைய உடையை களைந்துவிட்டு, புதிய உடையை மாட்டி, கண்ணாடியில் உடை பொருத்தத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்த வேளையில் அவரது பார்வையில் ஒரு செல்போன் பட்டது. அந்த அறையின் மையப்பகுதியை குறிவைத்து ஒரு அலமாரியில் பொருத்தப்பட்டிருந்த அந்த செல்போனின் வீடியோ கேமரா இயங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அந்தப் பெண் திடுக்கிட்டார்.
உடனடியாக, உள்ளே இருந்தபடி தனது கைபேசி மூலம் உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு போன் செய்து போலீசாரை அந்த கடைக்கு வரவழைத்தார். அந்த ரகசிய செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்தார். அந்த செல்போனின் உரிமையாளர் அதே தையற்கடையின் மேனேஜர் என்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து, செல்போனை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
தான் மட்டும் பார்த்து ரசிப்பதற்காக இதைப் போன்ற காட்சிகளை அவர் பதிவு செய்தாரா? அல்லது, அந்தப் பதிவுகளை ஆபாச இணையத்தளங்களுக்கு விலைக்கு விற்று பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அவர் இவ்வாறு செயல்பட்டாரா? என அவரது செல்போனில் உள்ள முந்தைய பதிவுகளின் மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Average Rating