செல்போனில் ஆபாச படம் காட்டி மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் சஸ்பெண்டு!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ளது கொளத்துப்பாளையம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.
தாராபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த காளிமுத்து(வயது 45) என்பவர் இங்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தளவாய்பட்டினத்தில் இருந்து இங்கு மாறுதலாகி வந்தார்.
ஆசிரியர் காளிமுத்து கடந்த சில நாட்களாக 7 மற்றும் 8–ம் வகுப்பில் படிக்கும் மாணவிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி அவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
பிரச்சினையை வெளியே சொல்ல முடியாமல் மாணவிகள் தவித்து வந்தனர். இதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட ஆசிரியர் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
பொறுமையிழந்த மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் ஆசிரியரின் லீலைகளை கண்ணீர் மல்க கூறினர். அதற்கு அவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தீர்களா? என்று கேட்டனர்.
அதற்கு மாணவிகள் ‘தலைமை ஆசிரியர் தேர்வு கண்காணிப்பு பணிக்காக சென்றிருக்கிறார். வந்தவுடன் புகார் செய்யலாம் என்றிருந்தோம். ஆனால் ஆசிரியர் தொடர்ந்து அத்துமீறி நடந்து கொள்கிறார்’ என்றனர்.
கொதித்தெழுந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்றனர். தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். பின்னர் பள்ளி முன்பு சாலையோரம் கிடந்த மின்கம்பத்தை இழுத்துப் போட்டு தாராபுரம்–கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அந்த சமயத்தில் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்த வழியாக காரில் வந்தனர்.
அமைச்சர் வந்த காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ஆசிரியரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங்கை தொடர்பு கொண்டு பேசினார். அவரது உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. கோபால்சாமி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தார். பின்னர் ஆசிரியர் காளிமுத்துவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு நடந்த விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் காளிமுத்து கைது செய்யப்பட்டார். ஆசிரியர் கைதாகியுள்ளாரே? அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி முருகனிடம் கேட்ட போது ஆசிரியர் காளிமுத்து இன்று சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று கூறினார்.
Average Rating