கவருக்குள் செல்போனை மறைத்து சிங்கப்பூர் பெண்களின் அந்தரங்கத்தை படம் பிடித்த இந்திய வங்கி அதிகாரிக்கு சிறை!!
பெண்களுக்கு தெரியாமல் அவர்களின் அந்தரங்கத்தை ரகசியமாக படம் பிடித்த இந்தியாவை சேர்ந்த வங்கி உயரதிகாரிக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த மஹா விக்னேஷ் வேலிப்பன்(32) என்பவர் சிங்கப்பூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையின் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு சிங்கபூரின் மத்திய வணிக மாவட்டத்தில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டட் பாங்க் கட்டிடத்துக்கு பணி நிமித்தமாக சென்ற அவர், கையில் ஒரு காகித கவருடன் லிப்டில் இறங்கி கீழே வந்து கொண்டிருந்தார்.
அவருடன் அதே ஸ்டாண்டர்ட் சார்ட்டட் பாங்கில் மக்கள் தொடட்பு அதிகாரியாக பணியாற்றிவந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க பெண் மட்டும் லிப்டினுள் இருந்தார். அமைதியான அந்த வினாடிகளில் தன்னுடன் தனிமையில் இருக்கும் அந்த ஆணின் பார்வையும், நடத்தையும் ‘ஒரு தினுசு’ ஆக இருந்ததை கண்ட அந்தப் பெண், அவரை விட்டு சற்று எட்டியே நின்றார்.
இருப்பினும் அவரது கையில் இருந்த ஒரு கவர் அந்தப் பெண்ணின் முழங்கால் பகுதியை உரசியது. கையில் கவரின் பிடி மட்டும் இருக்க, முழங்காலுக்கு கீழே கவரின் உள்ளேயிருந்து வெளியே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த ஒரு செல்போன் தனது குட்டைப் பாவாடை பகுதியை குறிவைத்திருப்பதை அவர் கண்டுபிடித்தார்.
உடனடியாக அந்த செல்போனைப் பறித்து, பரிசோதித்து பார்த்தபோது, குட்டைப் பாவாடையால் மறைக்கப்பட்டிருந்த தனது உடலின் அந்தரங்கத்தை அந்த நபர் ரகசியமாக படம் பிடித்திருப்பதை அறிந்த அந்தப் பெண் திடுக்கிட்டார். உடனடியாக, போலீசாரை வரவழைத்து அந்த செல்போனை அவர்களிடம் ஒப்படைத்து, விக்னேஷையும் அவர்களிடம் பிடித்து தந்தார்.
போலீசார் அவரது செல்போனை முழுமையாக சோதனையிட்டபோது, கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து சுமார் மூன்றாண்டு காலமாக இதைப்போன்ற இழிவான செயல்களில் அவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரது செல்போனில் 596 பெண்களின் விதவிதமான வீடியோ படங்கள் இருந்தன. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆபாச காட்சிகளையும், பெண்களுக்கு தெரியாமல் அவர்களின் அந்தரங்கத்தை பதிவு செய்து, தனிமையில் அந்த காட்சிகளை கண்டு களிக்கும் ‘வாயரிஸம்’ (voyeurism) என்ற மனவியாதியால் மஹா விக்னேஷ் வேலிப்பன் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சில ஆண்டுகளாக அதற்காக சிகிச்சை பெற்றுவரும் அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என்றும் வாதிட்ட அவரது வக்கீல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டாம் என நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்த நீதிபதி, மஹா விக்னேஷ் வேலிப்பனை 8 வாரங்கள் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார்.