வெடிகுண்டு வைத்து வாலிபர் கொலை: அண்ணன்–தம்பி உள்பட 3 பேருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை!!
நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டியை சேர்ந்தவர் செல்லக்குட்டி. இவர் கடந்த 2005–ம் ஆண்டு வயலில் உள்ள மின்மோட்டாரை இயக்கிய போது அதில் பொருத்தப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் செல்லக்குட்டி பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன், அவரது தம்பி சக்திவேல், உறவினர் சுரேஷ் ஆகியோர் வெடிகுண்டு வைத்து செல்லக்குட்டியை கொலை செய்து இருப்பது தெரிந்தது.
அன்பழகன் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய பெண் கேட்டார். ஆனால் இதற்கு பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அன்பழகன், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது செல்லக்குட்டி அந்த பெண்ணை காப்பாற்றி இருக்கிறார். பின்னர் செல்லக்குட்டிக்கு அதே பெண்ணை திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதனால் கோபம் அடைந்த அன்பழகன், தனது தம்பி சக்திவேல் மற்றும் உறவினர் சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து செல்லக்குட்டியின் வயலில் உள்ள மின்மோட்டாரில் வெடிகுண்டை பொருத்தி வெடிக்கச் செய்து அவரை கொன்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து அன்பழகன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்து இன்று நீதிபதி முருகன் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் அன்பழகன், சக்திவேல், சுரேஷ் ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பதாக கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக விஜயராஜ் வாதாடினார்.
Average Rating