மதுரையில் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் உதவியாளர் கைது!!
மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38). அடகு கடை வைப்பதற்காக இவர், சில மாதங்களுக்கு முன்பு மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
லைசென்சு அனுமதி கொடுக்க காலதாமதம் ஆகிக்கொண்டே இருந்தது. அவ்வப்போது அலுவலக உதவியாளர் கண்ணகியிடம் லைசென்சு குறித்து செல்வராஜ் கேட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று, கண்ணகியை சந்தித்து செல்வராஜ் விபரம் கேட்டார். அப்போது ரூ. 4 ஆயிரம் கொடுத்தால் தான் விரைவில் அடகு கடை வைக்க லைசென்சு பெற்று தருகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வராஜ் இதுகுறித்து மதுரை லஞ்ச ஓழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்வராஜிடம் கொடுத்து அனுப்பினர். அவர் கண்ணகியை தாசில்தார் அலுவலகத்தில் இன்று பகல் சந்தித்து ரூ. 4 ஆயிரத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. இசக்கி ஆனந்த், இன்ஸ்பெக்டர் அம்புரோஸ் ஆகியோர் கண்ணகியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் உதவியாளர் கைது செய்யப்பட்டதால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating