தண்டையார்பேட்டையில் சொத்து தகராறில் தொழில் அதிபரை மனைவி–மகன்கள் கடத்த முயற்சி!!
கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை சேர்ந்தவர் ஷேக்பாபா ஜான். தொழில் அதிபர் இவருக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளது.
சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக இவருக்கும் மனைவி மற்றும் 4 மகன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து ஷேக்பாபா ஜான் கடந்த 3 மாதத்துக்கு முன்பு குடும்பத்தை பிரித்து தனியாக தண்டையார் பேட்டையில் குடியேறினார். அதே பகுதி சுந்தரம்பிள்ளை நகரில் இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் ஷேக்பாபா ஜான் கடை முன்பு கார் நின்றது. அதில் இருந்து இறங்கிய 3 வாலிபர்களும், ஒரு பெண்ணும் கடைக்குள் புகுந்து ஷேக்பாபா ஜானிடம் தகராறில் ஈடுபட்டனர்.
திடீரென அவர்கள், அவரை சரமாரியாக தாக்கி இழுத்து வந்து காரில் ஏற்றி செல்ல முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் வியாபாரியை கடத்த முயன்றது குறித்து ஆர்.கே.நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஷேக்பாபா ஜானை விடுவித்து பெண் உள்பட 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் ஷேக்பாபா ஜானின் மனைவி பர்வீன்தாஜ், மகன்கள் ஷேக் மவுலானா, ஷேக் சதாம், ஷேக் முஜீர் என்று தெரிந்தது. சொத்து பிரச்சினையை தீர்க்க அவரை சொந்த ஊருக்கு கடத்தி செல்ல வந்ததாக அவர் கூறினார்.
இது தொடர்பாக 4 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. ஷேக்பாபா ஜான் கடந்த 3 மாதத்துக்கு முன்பே சொத்து தகராறால் மகன்களால் ஆபத்து இருப்பதாக புளியந்தோப்பு போலீசில் புகார் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து தகராறில் தொழில் அதிபரை மனைவி–மகன்களே கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating