புதுவை டாக்டர் தம்பதி வீட்டில் ரூ.15 லட்சம் ரொக்க பணம் கொள்ளை!!
புதுவை தில்லை மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் மணிகண்டஜோதி (வயது 35). இவரது மனைவி நித்யா (32). டாக்டர்கள் தம்பதியான இவர்கள் வீட்டின் அருகிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்கள்.
மணிகண்டஜோதி தனது வீட்டு படுக்கை அறையில் ஒரு லெதர்பேக்கில் ரூ. 15½ லட்சத்தை வைத்து அதனை படுக்கை மெத்தை அடியில் வைத்திருந்தார். பணம் இருக்கிறதா என்பதை அவ்வப்போது மணிகண்டஜோதி எடுத்து பார்ப்பது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மணிகண்டஜோதி ஆஸ்பத்திரி செலவுக்காக படுக்கை அறையில் வைத்திருந்த பணத்தை எடுக்க வந்தார். அப்போது படுக்கை மெத்தை பிளேடால் கிழிக்கப்பட்டு பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டிப்பதை கண்டு மணிகண்டஜோதி அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம ஆசாமிகள் பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து டாக்டர் மணிகண்டஜோதி நேற்று ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரவல்லவன், சப்–இன்ஸ்பெக்டர் கீர்த்தி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் டாக்டர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்களே இதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. படுக்கை அறையில் வைத்திருந்த பணத்தை டாக்டர் மணிகண்டஜோதி எடுத்து பார்க்கும்போது அதனை வீட்டில் வேலை செய்தவர்கள யாரேனும் நோட்டமிட்டு, திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
இதையடுத்து டாக்டர் மணிகண்டஜோதி வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் யார், யார்? என்பது குறித்தும், வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் மற்றும் கார் டிரைவர் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் டாக்டர் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பதால் அதன் மூலம் இந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.
Average Rating