சேலம் அருகே ரெயில் முன் பாய்ந்து பிளஸ்–2 மாணவி தற்கொலை!!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி, தானங்காட்டு வளவு பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். கூலி தொழிலாளி. இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.
இந்த நிலையில் மகள் வசந்தி (வயது 18) தொளசம் பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இவர் பொருளாதாரம் என்ற பிரிவு எடுத்து படித்து வந்தார்.
தற்போது நடைபெற்று வரும் பிளஸ்–2 பொது தேர்வு எழுதி வந்தார். இன்று இவர் படித்து வரும் பாடப்பிரிவுக்கான தேர்வு நடைபெற இருந்தது. அந்த தேர்வுக்கான பயத்தில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொளசம் பட்டி பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கவுண்டன்காடு என்ற இடத்தின் வழியாக செல்லும் தண்டவாளத்தில் இன்று காலை மாணவி வசந்தி பிணமாக கிடந்தார். அவரது உடல், கை, தலை ஆகியவை சிதைந்திருந்தது.
காலை 9 மணியளவில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், தண்டவாளத்தில் மாணவியின் உடல் கிடப்பதை கண்டு சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இன்று காலை அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிப்பட்டு மாணவி வசந்தி இறந்துள்ளது தெரியவந்தது.
இது பற்றி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
மேலும் பெற்றோர் கூறுகையில், மகள் வசந்தி அதிகாலை 4 மணி வரை வீட்டில் இருந்தார். மகள் அதுவரை வீட்டில் இருப்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அதன் பிறகு அவரை காணவில்லை. அவரை தேடி வந்தோம்.
இந்த நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடப்பதாக தகவலை கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றனர்.
மாணவி தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பன போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating