குடிபோதையில் ரகளை செய்த தந்தையை கொன்ற வாலிபர் கைது!!
பாவூர்சத்திரம் அருகே உள்ள கரிசலூரை சேர்ந்தவர் பிச்சுமணி (வயது55). பாத்திர வியாபாரியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.
மூத்த மகன் சுயம்புராஜன் (23) கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 2–வது மகன் செல்வம் (20) சென்னையில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் செல்வம் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் குடிப்பழக்கம் உடைய பிச்சுமணி நேற்றிரவு போதையில் வீட்டிற்கு வந்தார். அவர் மனைவி மற்றும் மகன்களுடன் ரகளையில் ஈடுபட்டார் இதை 2–வது மகன் செல்வம் தட்டிக்கேட்டார். இதில் தந்தை-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த பிச்சுமணி குடிபோதையில் கத்தியால் செல்வத்தை குத்தினார். லேசான காயம் அடைந்த செல்வம் தந்தையை கீழே தள்ளிவிட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிச்சுமணி மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் விரைந்து வந்து பிச்சுமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையே தந்தை இறந்ததால் செல்வம் தலைமறைவானார்.
இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து செல்வத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் டி.எஸ்.பி. சங்கு தலைமையிலான போலீசார் கரிசலூர் பகுதியில் பதுங்கி இருந்த செல்வத்தை கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:–
போதைக்கு அடிமையான எனது தந்தை தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார். நேற்றிரவு குடிபோதையில் அவர் என்னை கத்தியால் குத்தினார். தொடர்ந்து மீண்டும் கத்தியால் குத்த வந்த போது அவரை மடக்கி பிடித்து கீழே தள்ளினேன். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் இறந்து விட்டார்.
இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து போலீசார் செல்வத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating