திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் தாலி அகற்றும் விழாவுக்கு, செல்போனில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு!!
திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் வருகிற 14–ந்தேதி தாலி அகற்றும் விழா நடத்தப்படும் என்று கி.வீரமணி அறிவித்திருந்தார். நுங்கம் பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.
இதற்கு இந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தி.க. சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 10 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
வேப்பேரி, அயனாவரம், தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையங்களிலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தாலி அகற்றும் போராட்டம் தொடர்பாக திராவிடர் கழகத்தின் மகளிர் பாசறை சார்பில் அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14–ந்தேதி அன்று வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும் பெண்களின் அடிமைத்தளையாம் தாலி அகற்றும் புரட்சி விழாவில் பங்கேற்று தாலியை அகற்றிக் கொள்ள விரும்புவோர் செல்போனில் முன்பதிவு செய்தல் அவசியமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
99403 48533, 98412 63955 ஆகிய செல்போன் எண்களும் அதில் இடம் பெற்றுள்ளன. இதில் தொடர்பு கொண்டு 7 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர் என்று திராவிடர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், இந்த எண்களில் தொடர்பு கொள்ளும் பலர், தங்களது எதிர்ப்பையும், கடுமையாக பதிவு செய்கின்றனர் என்று தி.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
திராவிடர் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தாலி அகற்றும் விழாவுக்கான முன்பதிவு அறிவிப்புக்கு ‘பேஸ்புக்’ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களிலும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. இந்து அமைப்புகள் சார்பில் பலர் தங்களது எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
பெரியார் திடலில் நடைபெறும் போராட்டம் என்பதால் இந்த விழாவுக்கு போலீசாரிடம் அனுமதி பெற தேவையில்லை என்றும் தி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்த விவகாரத்தை கையாள்வது எப்படி? என்பது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்’’ என்றார்.
Average Rating