சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோ வெளியான வழக்கு: 2-வது குற்றவாளியை கைது செய்தது சி.பி.ஐ.!!
சமூக வலைத்தளங்களில் பெண்களை பலாத்காரம் செய்த வீடியோவை பரவச் செய்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 2-வது நபரை சி.பி.ஐ. இன்று கைது செய்துள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன், தனது 15-ம் வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர். தற்போது, குழந்தைகள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராக ‘பிரஜ்வாலா‘ என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வரும் இவருக்கு ஏழு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இரண்டு வீடியோ காட்சிகள், ‘வாட்ஸ்அப்’பில் வந்தது. அதைப் பார்த்த சுனிதாவுக்கு, இதயமே நின்று போனது. அந்த வீடியோவில் 5 பேர் கொண்ட கும்பல், இரு இளம்பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு இருந்தது. ஒரு படம், 8 நிமிடங்களும், மற்றொரு படம் 4 நிமிடங்களும் இருந்தது.
இளம்பெண்ணை மிரட்டுவதற்காகவே, அந்த கும்பலே அதை படம் பிடித்து இருப்பது போல் தெரிந்தது. அந்த கும்பல் கைது செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய சுனிதா கிருஷ்ணன், கடந்த பிப்ரவரி மாதம் 5-ம்தேதி அந்த இரண்டு வீடியோக்களையும் ‘யூ டியூபில்‘ வெளியிட்டு அதில் தெரியும் கொடூரர்களை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால், அந்த வீடியோவை யூ-டியூப் தனது தளத்திலிருந்து நீக்கிவிட்டது.
இந்நிலையில் திரைப்பட இயக்குனரான தனது கணவரின் மூலம் அந்த வீடியோவை எடிட் செய்து அந்த கொடூரர்களின் முகத்தை வட்டக்குறிக்குள் அடைத்து எளிதில் அடையாளம் காணும் வண்ணம் மீண்டும் அந்த வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவின் விளைவாகவே உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது மட்டுமின்றி அதை சி.பி.ஐ விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
உடனடியாக விசாரணையைத் தொடங்கிய சிபிஐ போலீசார் இந்த மாத தொடக்கத்தில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த சுப்ரத் சாகு (எ) காலியாவை கைது செய்த நிலையில், இன்று ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கைச் சேர்ந்த டெபாஷிஸ் தேவ்(30) என்பவரைக் கைது செய்தனர். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப அச்சுறுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.