வக்கீல் பெண் குமாஸ்தா மீது ஆசிட் வீச்சு: கணவர் உள்பட 2 பேர் கைது!!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ளா கோணி என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 30) வக்கீல் குமாஸ்தா. இவரது கணவர் பெயர் சுனில் குமார் (45).
கணவன்–மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ஸ்ரீஜா கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீஜாவின் நடத்தையில் சுனில்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி ஸ்ரீஜாவிடம் தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் சுனில்குமார் தனது நண்பர் பிரகாஷ் என்வருடன் ஸ்ரீஜாவின் வீட்டிற்கு சென்றார். அவர் வீட்டுக்கதவை தட்டியதும் ஸ்ரீஜா கதவை திறந்து வெளியே வந்தார்.
அப்போது அவரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்ட சுனில்குமார் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை ஸ்ரீஜா மீது வீசி விட்டு அங்கிருந்து நண்பருடன் தப்பி ஓடி விட்டார். ஆசிட் வீச்சில் ஸ்ரீஜாவின் முகம், கழுத்து போன்ற பகுதிகள் கருகியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ஸ்ரீஜாவை காப்பாற்றி பத்தனம்திட்டா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றிய புகாரின் பேரில் பத்தனம்திட்டா போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீஜாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் நடந்த சம்பவத்தை வாக்குமூலமாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சுனில் குமார் மற்றும் அவரது நண்பர் பிரகாஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating