கிரிக்கெட் மைதானம் யாருக்கு சொந்தம்?: பழங்குடியின சிறுவர்களை தாக்கிய மருத்துவ கல்லூரி மாணவர்கள் கைது!!
மேற்கு வங்க மாநிலத்தில், மைதானத்தில் விளையாடுவது யார்? என்ற சண்டையில் உள்ளூர் பழங்குடி சிறுவர்களைத் தாக்கிய 2 மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள பொது மைதானத்தில் உள்ளூர் பழங்குடி சிறுவர்கள் கடந்த 7 வருடங்களாக கால்பந்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக அங்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினர்.
நேற்று கால்பந்து, கிரிக்கெட் என்று 2 விளையாட்டுமே ஒரே நேரத்தில் நடைபெற மைதானத்தில் 2 பந்துகளும் மாறி மாறி மற்ற தரப்பினரின் விளையாட்டிற்கு இடையூறு செய்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தொடங்கிய வாக்குவாதம் சண்டையாக மாறியது. இந்த சண்டையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பழங்குடி சிறுவர்களை கிரிக்கெட் பேட்டால் தாக்கினர்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட 3 பழங்குடியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட மருத்துவ கல்லூரி மாணவர்களைக் கைது செய்ய வேண்டுமென புகாரளித்து, பழங்குடியினர் நேற்று போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக, 2 மருத்துவக் கல்லூரி மாணவர்களை இன்று போலீசார் கைது செய்து உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
Average Rating