கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!!
மேற்கு வங்காளத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் ரானாகாட் அருகே கங்னாபூர் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் கடந்த 14–ந் தேதி அதிகாலை 71 வயது கன்னியாஸ்திரி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். மர்ம நபர்கள் சிலர் அவரது அறைக்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, பீரோவில் இருந்த ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில், சம்பவத்தன்று மர்ம நபர்கள் 4 பேர் அங்கு வந்த காட்சி பதிவாகி இருந்தது. அதை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கன்னியாஸ்திரி கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக மராட்டிய மாநில தலைநகர் மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள நாக்படா என்ற இடத்தில் சிக்கந்தர் ஷேக் என்ற சலீம் என்பவன் கைது செய்யப்பட்டான். மும்பை போலீசாரின் உதவியுடன் மேற்கு வங்காள சி.ஐ.டி. போலீசார் அவனை கைது செய்தனர். இவன் அண்டை நாடான வங்காளதேசத்தைச் சேர்ந்தவன் ஆவான். சலீம் கைதானதை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோபால் சர்க்கார் என்பவனை, மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள ஹப்ரா என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர்.
தற்போது இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேர் லூதியானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்ட 4 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Average Rating