திருச்செந்தூர் அருகே திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை: காதலன் கைது!!
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வாணியங்கால்விளையை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மகள் சண்முகசுந்தரி (வயது 25). பிளஸ்–2 வரை படித்துள்ள இவருக்கு திருமணமாகவில்லை. சண்முகசுந்தரிக்கும், அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ என்ஜினீயரான மணிகண்டன் (25) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
மணிகண்டன் தனது காதலியிடம் உன்னை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் எனக்கூறி பழகி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக மணிகண்டன் சண்முகசுந்தரியை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகசுந்தரி, காதலனிடம் சென்று என்னை எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது மணிகண்டன் நான் உன்னை திருமணம் செய்ய முடியாது என கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சண்முகசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Average Rating