காங்கயத்தில் கோவில் கொள்ளை வரைபடம் தயாரித்து கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்!!
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவியார் பாளையத்தில் புராதனமான பரமசிவன், பார்வதி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்தக் கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.
கோவில் முழுவதும் கருங்கற்களால் சிற்ப வேலைப்பாட்டுடன் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் வேறு எங்கும் இல்லாத வகையில் மூலவரான பரமசிவன் விநாயகர், முருகர், பார்வதியுடன் நந்தி மீதமர்ந்தபடி ஒரே பீடத்தில் காட்சி தருகிறார். இவை அனைத்தும் ஐம்பொன் சிலைகளாகும்.
கடந்த 30–ம் தேதி மதியம் வழக்கம் போல பூஜை செய்ய கோவிலைத் திறந்த குருக்கள் கோயில் கதவுகள் உடைக்கப்பட்டு ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஊர் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸ் அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிலைத் திருடர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த கோவிலில் கொள்ளையடிக்க கடந்த 6 மாதம் முன்பே கொள்ளையர்கள் மேப் தயாரித்து நோட்டம் விட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, கடந்த 6 மாதம் முன்பு இப்பகுதியில் உள்ள ஒரு கரும்புக் காட்டுக்குள் சிலர் உட்கார்ந்து ஒரு மேப்பை வைத்து மார்க் செய்து ஏதோ திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக எங்கள் ஊரைச் சேர்ந்தவர் வந்தபோது போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
அந்த மேப்பில் இந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மார்க் செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்து கோயில் பகுதியில் எந்தெந்த வீடுகள் உள்ளன. எளிதாக கொள்ளையடித்துவிட்டு எந்த வழியாக தப்பிச் செல்வது என்பது பற்றி அப்போது திட்டமிட்டிருக்கலாம். இதுபற்றி காங்கயம் போலீசிலும், இந்துசமய அறநிலையத் துறையிலும் தகவல் தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள் இந்த விஷயத்தில் அக்கரையுடன் செயல்படாததால்தான் இப்போது இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என்றனர்.
Average Rating