பிறந்து 1 மணி நேரத்தில் குழந்தையை புதரில் வீசிய தாய்: போலீசார் மீட்டு பாட்டியிடம் ஒப்படைத்தனர்!!
செங்குன்றம் பாயாசம் பாக்கம் திருமலைநகர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா. இவரது வீட்டின் பின்புறம் இன்று காலையில் நாய்கள் குரைத்தன.
மல்லிகா அங்கு சென்று பார்த்தபோது பிறந்து 1 மணி நேரம் ஆன பெண் குழந்தை உயிரோடு சாக்கு பையில் சுற்றி புதரில் போடப்பட்டு இருந்தது.
செங்குன்றம் சப்–இன்ஸ்பெக்டர் சுதா சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
அப்போது பாயாசம் பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோலம்மாள் (54) என்பவர் அங்கு வந்து குழந்தை எனது மருமகள் கொடிமலருக்கு பிறந்தது என தெரிவித்தார்.
செங்குன்றம் போலீசார் கோலம்மாளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூறியதாவது:–
எனது மகன் முரளி (32), மருமகள் கொடிமலர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கொடிமலர் 3–வது முறை கர்ப்பம் ஆனார். அதை என்னிடமோ, முரளியிடமோ தெரிவிக்கவில்லை.
இன்று காலை கொடிமலர் ரத்த கரையுடன் படுத்து கிடந்தாள். நான் அவளிடம் விசாரித்தேன். இன்று காலையில் ஒரு பெண் குழந்தை தனக்கு பிறந்ததாகவும், குழந்தையை திருமலை நகரில் உள்ள புதரில் விட்டு வந்ததாகவும் கூறினார்.
இவ்வாறு கோலம்மாள் தெரிவித்தார்.
இந்த பெண் குழந்தையை தான் வளர்க்க விரும்புவதாகவும் கோலம்மாள் கூறினார். இதை தொடர்ந்து போலீசார் குழந்தையை கோலம்மாளிடம் ஒப்படைத்தனர்.
கொடிமலரை சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அவர் எதற்காக குழந்தையை புதரில் வீசினார் என்று விசாரணை நடக்கிறது.
Average Rating