முட்டாள்கள் தின குறும்பு என நினைத்து மகனின் மரண செய்தியை நம்ப மறுத்த பெற்றோர்!!
மற்றவர்களை முட்டாளாக்கி மகிழ்ச்சியடையும் தினமான ஏப்ரல் 1, மனித மனங்களில் ஆறாத காயங்களை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் பெற்றோரிடம் போலீசார் தகவலை தெரிவிக்கையில், அவர்கள் தங்களை ஏப்ரல் ஃபூல் செய்கிறார்கள் என்று நினைத்து 2 முறை போலீசாரின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
கான்பூர் நகரில் உள்ள கோவிந்த்புரி ரெயில்வே நிலையம் அருகே 24 வயதான ‘அங்கித்’ என்ற வாலிபர் நேற்று ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் வாலிபரின் பிரேதத்தை மீட்டனர். பின்னர், அவரது பெற்றோரின் தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து அவர்களுக்கு இந்த துக்கமான செய்தியை தெரிவித்துள்ளனர்.
ஆனால், நேற்று ஏப்ரல் 1 என்பதால் தங்களை யாரோ முட்டாளாக்கப் பார்க்கிறார்கள் என்று நினைத்த அங்கித்தின் பெற்றோர் போலீசாரின் தகவலை நம்ப மறுத்தனர். 2 முறை அழைத்து ‘நாங்கள் உங்களை ஏப்ரல் ஃபூல் செய்யவில்லை, இது உண்மைதான்’ என்று போலீசார் தெரிவித்த பின்னரும் கூட, அதை நம்ப மறுத்து அழைபைத் துண்டித்துள்ளனர்.
வேறு வழியின்றி வாலிபரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், ஜலவுன் மாவட்டத்தில் உள்ள அவர்களின் வீட்டிற்குச் சென்று உங்கள் மகன் இறந்து விட்டான் என்று தெரிவித்த பிறகே அவர்களுக்கு உண்மை உறைத்திருக்கிறது. மகனின் துயரமான முடிவை எண்ணி கதறித் துடித்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பின் அங்கித்தின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating