கலவரக்காரர்களை விரட்டியடிக்க மிளகுப் பொடி தூவும் ஆளில்லா விமானங்கள்: உ.பி.போலீசார் அதிரடி திட்டம்!!
போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஏற்படும் திடீர் கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஆளில்லா விமானங்கள் மூலமாக மிளகுப் பொடி தூவி கலவரக்காரர்களை விரட்டியடிக்க உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
தலைநகர் லக்னோவில் முஹர்ரம் ஊர்வலம், லக்னோ மகோத்சவம் மற்றும் குடியரசு தின விழா ஊர்வலம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்த ஆளில்லா விமானங்களில் கேமராக்களை அமைத்து கண்காணித்து, வெற்றி கண்டுள்ள போலீசார், அடுத்த கட்டமாக இந்த விமானங்களின் உதவியுடன் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, 2 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லும் 5 ஆளில்லா விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் மிளகுப் பொடி தூவும் இயந்திரத்தை பொருத்தி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஏற்படும் திடீர் கலவரத்தை கட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
ஒவ்வொன்றும் சுமார் 6 லட்சம் ரூபாய் விலையில் வாங்கப்பட்டுள்ள இந்த விமானங்கள் சுமார் 600 மீட்டர் உயரத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பறந்து செல்லும் ஆற்றல் கொண்டது என்று தெரிவித்துள்ள உத்தரப்பிரதேசம் மாநில மூத்த போலீஸ் சூப்பிரண்ட் யாஷவி யாதவ், இம்மாத இறுதியில் இந்த திட்டத்தை மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தொடங்கி வைப்பார் என்றும் கூறினார்.
Average Rating