பணகுடி அருகே காதலன் வீட்டு முன்பு நர்ஸ் தர்ணா போராட்டம்!!
பணகுடி அருகே உள்ள சைதம்மாள்புரத்தை சேர்ந்தவர் பூமணி. இவரது மகள் மாதவி(வயது22). இவர் நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ராமச்சந்திரன்(20). இவர் காவல்கிணறு விலக்கில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
ராமச்சந்திரனுக்கும், மாதவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். மாதவியின் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் கடந்த 6 மாதமாக மாதவி ராமச்சந்திரனின் வீட்டில் இருந்தே வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் மாதவி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ராமச்சந்திரனிடம் வலியுறுத்தினார். அதற்கு ராமச்சந்திரன் மறுத்ததாக தெரிகிறது. இதனால் வேதனை அடைந்த மாதவி நேற்று இரவு ராமச்சந்திரனின் வீட்டு முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி பணகுடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாதவியிடமும், ராமச்சந்திரன் குடும்பத்தாரிடமும் பேச்சு நடத்தினர்.
இந்த விசயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மாதவி போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating