குமரி மாவட்டத்தில் விடுமுறை நாளில் மது விற்ற பெண் உள்பட 17 பேர் கைது!!
மகாவீரர் ஜெயந்தியை யொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதனால் குமரி மாவட்டத்தின் பல இடங்களில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் மதுவிலக்கு போலீசார் பருத்திவிளை பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு திருட்டுத்தனமாக மது விற்றதாக எறும்புகாடை சேர்ந்த பிரின்ஸ்(வயது 55) என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 30 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தம்மத்துகோணம் பகுதியில் டென்னிஸ்(37), கோட்டார் பீச் ரோட்டில் பாலன்(30) ஆகியோரை திருட்டு மது விற்றதாக போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 15 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல, வியன்னூரை சேர்ந்த மணி(67), தேவிகோடு பகுதியை சேர்ந்த சிசில் என்பவரது மனைவி டெய்சி(45), கீழகல்குறிச்சி கிருஷ்ணன்(49), பள்ளியாடி மரியதாஸ்(67), ஆகியோர் திருட்டு மது விற்றதாக தக்கலை மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தக்கலை புலியூர்குறிச்சியில் கிருஷ்ணமூர்த்தி, அழகியமண்டபத்தில் சிவகணேஷ்(25), ஆரல்வாய்மொழியில் முத்து கிருஷ்ணன், ராஜாக்கமங்கலத்தில் தியாகராஜன்(27), சுயம்பு(39), நாதன்(30), ராஜ குமார்(42), பாலகிருஷ்ணன் (32), சுசீந்திரத்தில் சைமன்(48), லெட்சுமணன்(63) ஆகியோரையும் திருட்டு மது விற்றதாக போலீசார் கைது செய்தனர்.
மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் திருட்டு மது விற்றதாக பெண் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 141 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Average Rating