பெங்களூருவில் மாணவியை சுட்டுக் கொன்றவருக்கு 10-ந்தேதி வரை போலீஸ் காவல்!!
துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் கவுதமி (வயது 18). இவர், பெங்களூரு காடுகோடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி படித்து முடித்து விட்டு, விடுதியில் தங்கி இருந்து பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி இரவு விடுதியில் தங்கி இருந்த மாணவி கவுதமியை அங்கு பணியாற்றும் ஊழியர் மகேஷ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். மேலும் மகேஷ் சுட்டதில் மற்றொரு மாணவி ஸ்ரீஷாவும் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கே.ஆர்.புரம் அருகே பி.நாராயணபுராவில் தனது அக்காள் வீட்டில் பதுங்கி இருந்த மகேசை கைது செய்தார்கள். அவரிடம் இருந்து துப்பாக்கி, குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான மகேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கோரமங்களாவில் உள்ள நீதிபதியின் வீட்டில் ஊழியர் மகேசை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மாணவி கவுதமி கொலை வழக்கு தொடர்பாக மகேசிடம் விசாரணை நடத்த வேண்டிய இருப்பதால், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதியிடம் போலீசார் அனுமதி கேட்டனர். அதைத் தொடர்ந்து, மகேசை 10-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து போலீசார், பலத்த பாதுகாப்புடன் மகேசை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
கே.ஆர்.புரம் ரெயில் நிலையம் அருகே ஒருவரிடம் மகேஷ் துப்பாக்கியை விலைக்கு வாங்கியது தெரியவந்துள்ளது. அதுகுறித்தும், மாணவியை என்ன காரணத்திற்காக கொலை செய்தார்? என்பது குறித்தும் மகேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஹரிசேகரன் கூறுகையில், ‘‘பெங்களூரு காடுகோடியில் தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவியை கொலை செய்த ஊழியர் மகேசை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் போது மாணவியை கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி தெரியவரும். மாணவி கொலை வழக்கு தொடர்பாக கல்லூரியின் சேர்மன் சோம்சிங் கைது செய்யப்பட்டார். அதுபோல, கல்லூரியின் முதல்வரான பிரசாந்த் என்பவரையும் காடுகோடி போலீசார் கைது செய்து உள்ளனர்.
கல்லூரி சேர்மன், முதல்வர் மீது அலட்சியமாக இருந்ததாகவும், கல்லூரிக்கு ஒரு ஊழியர் அத்துமீறி துப்பாக்கியை எடுத்து சென்றதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,’’ என்றார்.
Average Rating