விக்கிரவாண்டி அருகே கோவில் விழாவுக்கு சென்று திரும்பிய பெண்ணை தாக்கி ரூ.1 லட்சம் நகை பறிப்பு!!
விக்கிரவாண்டி அருகே மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன், விவசாயி. இவரது மனைவி வள்ளி (வயது 35). இவர் நேற்று கஞ்சனூர் அருகே நகர் கிராமத்தில் நடந்த கோவில் விழாவை காண சென்றார். பின்னர் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
கே.புதூர் என்ற இடத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த ஒரு வாலிபர் திடீரென வள்ளியை வழிமறித்தார். இதையடுத்து வள்ளி என்ன ஏதுவென்று விசாரித்துகொண்டிருக்கும் போதே வள்ளியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை அந்த வாலிபர் பறிக்க முயன்றார். நகையை காப்பாற்றி கொள்ள வள்ளி அந்த வாலிபரிடம் போராடியபோது அவன் வள்ளியை சரமாரியாக தாக்கி 4½ பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டான்.
கொள்ளையன் தாக்கியதில் படுகாயம் அடைந்த வள்ளி சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் வள்ளியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
கோவில் விழாவுக்கு சென்று திரும்பிய பெண்ணை தாக்கி நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Average Rating