சத்தீஸ்கரில் பரிதாபம்: காட்டு யானை கூட்டத்திடம் மிதிபட்டு 3 பெண்கள் பலி!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டத்தில் காட்டு யானை கூட்டத்திடம் சிக்கி மிதிபட்ட 3 பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
இங்குள்ள கர்டாலா வனப்பகுதியில் இன்று விறகு சேகரிக்க சென்ற சில பெண்களை கண்ட காட்டு யானை கூட்டம் அவர்களை விரட்ட தொடங்கியது. இதை கண்டு பயந்து ஓடிய சில பெண்கள் கால் தடுக்கி கீழே விழுந்தனர். சுமார் 15 யானைகள் அவர்கள் மீது ஏறி மிதித்தபடி ஓடியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறை காவலர்கள் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோரச் சம்பவத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்தாருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் உடனடி நிவாரணமாக வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகம் தொடர்பான ஆவண சரிபார்ப்பு நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர், இந்த குடும்பங்களுக்கு மேலும் தலா 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating