மராட்டியத்தில் 55 மாணவிகள் மானபங்கம்: 3 ஆசிரியர்கள் கைது!!
மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டம் பாபில்கவ் என்ற இடத்தில் தனியார் உறைவிட பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் மானபங்கப்படுத்துவதாக மாநில பெண்கள் ஆணையத்துக்கு கடந்த 27–ந்தேதி ஒரு கடிதம் வந்தது. கையெழுத்து இல்லாமல் வந்த இந்த கடிதத்தை வைத்து மாநில பெண்கள் குழு உறுப்பினர்கள் ஆஷா மிர்கே அங்கு சென்று மாணவிகளிடம் பேசினார்.
அப்போது அந்த பள்ளியில் படிக்கும் 55 மாணவிகள் சித்ரவதை செய்யப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகளை மானபங்கப்படுத்திய ராம் சந்த், சைலேஷ்ராம்டேக், சந்தீப் லட்கர் ஆகிய 3 ஆசிரியர்களை கைது செய்தனர்.
மாணவிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த இந்த 3 ஆசிரியர்களில் சைலேஷ் ராம்டேக் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து மாநில பெண்கள் ஆணைய உறுப்பினர் ஆஷாமிர்கே கூறியதாவது:–
நான் அந்த உறைவிட பள்ளிக்கு சென்று 359 மாணவிகளிடம் பேசினேன். இதில் 55 மாணவிகள் தங்களை 3 ஆசிரியர்கள் அடிக்கடி மானபங்கம் செய்து சித்ரவதை செய்ததாக எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் இந்த இழிவான செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.
மானபங்கப்படுத்தியதை வெளியே சொன்னால் சோதனை தேர்வு மதிப் பெண்ணை குறைத்து விடுவதாக 3 ஆசிரியர்களும் மிரட்டி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating