40-வது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி விழுந்து நொறுங்கியது!!
இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சென்னை விமான நிலைய வளாகத்தில் அவ்வப்போது கூரை (பால்ஸ் ஸீலிங்) மற்றும் கண்ணாடி தடுப்புகள் உடைந்து விழுவது தொடர்கதையாகி விட்டது.
உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடப்பதையடுத்து, விமான போக்குவரத்து துறை மந்திரி அஷோக் கஜபதி ராஜூ கடந்த அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையத்துக்கு வந்து பார்வையிட்டு சென்றார்.
இருப்பினும், இது தொடர்பாக எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. கடந்த முதல் தேதி கூட விமான நிலையத்தின் கண்ணாடி கதவு உடைந்து விழுந்ததில் ஒரு தொழிலாளி காயம் அடைந்தார். இந்நிலையில், 40-வது முறையாக இன்றும் ஒரு பெரிய கண்ணாடி விழுந்து நொறுங்கியது.
சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதியில் உள்ள 17-ம் எண் நுழைவு வாயிலில் ஏற்பட்ட இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என சென்னை சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Average Rating