செல்போன் பேசியபடி பஸ் ஓட்டும் டிரைவர்கள் சஸ்பெண்ட்: அதிகாரி எச்சரிக்கை!!
பயணிகளின் பாதுகாப்பு கருதி செல்போனில் பேசிக்கொண்டே பஸ் ஓட்டக்கூடாது என்று அரசு டிரைவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இதனால் டிரைவர்கள் செல்போனில் பேசுவதையும், அதை வைத்திருப்பதையும் தவிர்த்தனர். பணியின்போது, அவசரம் ஏற்பட்டால் கண்டக்டரிடம் இருந்து செல்போனை வாங்கி பேசினார்கள்.
ஆனால் இந்த உத்தரவை தொடர்ந்து கடுமையாக அமல்படுத்தாத காரணத்தால் நீண்ட தூர மற்றும் அரசு டவுன் பஸ்களில் சில டிரைவர்கள் செல்போனில் பேசிக்கொண்டே பஸ்சை ஓட்டுகிறார்கள். இதனால் கவனம் சிதறி விபத்து அபாயம் மற்றும் உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்து துறை உயர் அதிகாரி கூறியதாவது:–
செல்போனில் பேசிக்கொண்டே பஸ் ஓட்டக்கூடாது என்று அரசு பஸ் டிரைவர்களுக்கு ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. அதை அவர்கள் பின்பற்றுகிறார்களா? என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதை மீறி செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டும் டிரைவர்கள் குறித்து, பயணிகள் தரப்பில் இருந்து வழித்தடம் மற்றும் பஸ் எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு புகார் செய்தால் அந்த டிரைவர்கள் மீது விசாரணைக்கு பின் ‘‘சஸ்பெண்டு’’ உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பஸ் டிரைவர்கள் மீதும், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating