இந்தியாவில் உள்ள சரிபாதி பேர் சுய வைத்தியத்தையே இன்னும் நம்புகின்றனர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!
இந்தியர்களில் 52 சதவீதம் மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு உடனடியாக உரிய டாக்டர்களிடம் சென்று நிவாரணம் தேடுவதில்லை; மாறாக, மருந்துக் கடைக்காரர்கள் மற்றும் பஸ், ரெயில்களில் அறிமுகமாமும் புதிய நபர்களின் ஆலோசனைப்படி சுய வைத்தியம் செய்து நோயின் தன்மையை தீவிரமடையச் செய்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
உலக சுகாதார தினமான இன்று தங்களது உடல் ஆரோக்கியத்தில் இந்தியர்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளனர்? என்பது தொடர்பாக ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 2 ஆயிரம் பேரிடம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தங்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு இவர்களில் சரிபாதி பேர் உடனடியாக உரிய டாக்டர்களிடம் சென்று நிவாரணம் தேடுவதில்லை; மாறாக, மருந்துக் கடைக்காரர்கள் மற்றும் பஸ், ரெயில்களில் அறிமுகமாகும் புதிய நபர்களின் ஆலோசனைப்படி சுய வைத்தியம் செய்து நோயின் தன்மையை தீவிரமடையச் செய்கின்றனர்.
டாக்டர்களின் ஆலோசனைகளை பெறாமல் இதுபோல் அடிக்கடி அதிக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை கைவைத்தியம் முறையில் இவர்கள் எடுத்துக் கொள்வதால் பிற்காலத்தில் இவர்களின் உடல் இவ்வகை மருந்துகளுக்கு கட்டுப்படாமல் போய்விடுகின்றது.
இதுமட்டுமின்றி, ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் இலவச ஆலோசனைகளை பெற்று, அதன் பலன் என்னவென்று முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தவறான மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். டாக்டர்களிடம் நேரில் சென்று ஆலோசனை பெறுவதற்கு இவர்கள் தயங்குவதற்கான முக்கிய காரணிகளில் காத்திருக்கும் நேரம், பணச்செலவு போன்றவை முதலிடம் பிடிக்கின்றது.
இந்த போக்கை மாற்றும் வகையில், தங்களது திறமை முறையாக பயன்படுத்தப்படாமல் உள்ள சுமார் 8 லட்சம் ஆயுர்வேத டாக்டர்களை சுகாதாரத்துறையினர் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அந்த ஆய்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.
Average Rating