புதுக்கோட்டையில் பெண் தகராறில் ரவுடி வெட்டிக்கொலை!!
புதுக்கோட்டை, காந்திநகர் 5–ம் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பாண்டியன் (வயது 29). கடந்த 15.3.2014–ல் அதே பகுதியை சேர்ந்த திவான் என்பவர் பாண்டியின் உறவுக்கார பெண் ஒருவரை வழிமறித்து தகராறு செய்ததோடு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுபற்றி அந்த பெண் பாண்டியனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியன் தனது நண்பர் மேத்தா திவானுடன் சேர்ந்து திவானை கொலை செய்துள்ளார். இதில் கைதான பாண்டியன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது. வருகிற 10–ந்தேதி வாய்தாவும் உள்ளது.
இதற்கிடையே திவானை கொன்ற பாண்டியனை பழிக்குப்பழி வாங்க திவானின் தம்பி போரிஸ் தக்க தருணம் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டையில் உள்ள ஆபீசர்ஸ் கிளப் அருகே பலத்த வெட்டு காயங்களுடன் பண்டியன் இறந்து கிடந்தார். அவரது தலை, கழுத்து பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். திவானின் கொலைக்கு பழிக்குப்பழியாக பாண்டியன் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் தலைமறைவாக உள்ள திவானின் தம்பி போரிசையும் போலீசார் தேடி வருகிறார்கள். இவர் புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating