ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு: பா.ஜனதா பெண் கவுன்சிலரின் கணவர் கைது!!
கோவை மாநகராட்சி 1–வது வார்டு பா.ஜனதா கவுன்சிலராக இருப்பவர் வத்சலா. இவரது வீட்டில் கடந்த 26–ந் தேதி திருப்பூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் துடியலூர் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கவுன்சிலர் வத்சலா, அவரது உதவியாளர் இளங்கோ மற்றும் தினேஷ் குமார், ஆட்டோ குமார், கனகு (என்கிற) கனகராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் வத்சலாவின் வீட்டில் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட பிரச்சினையில் வத்சலாவின் கணவர் வரதராஜ் மற்றும் அவரது வேலையாட்கள் 4 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை கட்டையால் தாக்கி கொன்றது தெரியவந்தது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட வத்சலாவின் கணவர் வரதராஜ் தலை மறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
கடந்த 10 நாட்களாக வரதராஜ் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் ஜி.என்.மில்ஸ் பகுதியில் வரதராஜ் பஸ்சுக்காக காத்திருப்பதாக துடியலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்ததும் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீஸ்காரர்கள் வெங்கடேசன், கணேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு நின்று கொண்டிருந்த வரதராஜை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட வரதராஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஆறுமுகத்தை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவரை தாக்கவில்லை. பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட தகராறில் அடித்தோம். அவர் இறந்து விட்டார் என்று தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating