கோவை உப்பிலிபாளையத்தில் பொதுமக்களை கடித்து குதறும் வெறிநாய்கள்!!
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கடலைக்காரசந்து மற்றும் உப்பிலிபாளையம் பகுதியில் தற்போது 30–க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக வருவோர் போவோரை எல்லாம் கடித்துக்குதறுகின்றன. மேலும் கடைக்குச் செல்லும் சிறுவர்கள், வாசல் தெளித்து கோலம்போடும் பெண்கள், வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் முதியவர்கள் ஆகியோரையும் படாதபாடு படுத்துகின்றன.
இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள், குழந்தைகள் வெளியே வரவே அஞ்சுகின்றனர். அந்த பகுதியில் உள்ள வீடுகள் எல்லாம் எப்போதும் மூடியே கிடக்கின்றன. நாளுக்கு நாள் வெறிநாய்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இதுவரை ஒரு குழந்தை உள்பட 4 பேரை நாய்கள் கடித்துக்குதறி உள்ளன.
இனிமேலும் பொதுமக்களை வெறிநாய்கள் கடித்துக்குதறும் முன்பு அவற்றை ஊசிபோட்டு பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது தெருவுக்கு வந்துள்ள இந்த நாய்கள் எல்லாம் முன்னர் கலெக்டர் அலுவலகத்துக்குள் ஆங்காங்கே ஓய்வெடுத்தன. தற்போது கலெக்டர் அலுவலகம் இடித்து புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே அவை அங்கு தங்க இடம் இல்லாமல் வீதிக்கு வந்துவிட்டன.
Average Rating