ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா: சம்மன் அனுப்பப்பட்ட பேப் இண்டியா நிர்வாகிகள் முன்ஜாமீன் கோரி மனு!!
கோவா மாநிலத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் கேமரா இருந்தது தொடர்பான வழக்கில் போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்ட பேப் இண்டியா முக்கிய நிர்வாகிகள் 7 பேர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். விசாரணைக்கு அழைத்துள்ள போலீசார் தங்களை கைது செய்வதை தவிர்க்கும் பொருட்டு இவர்கள் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான வில்லியம் பிஸ்ஸல், தலைமை செயல் அதிகாரி சுப்ரதா தத்தா, பிராந்திய மேலாளர் ருசிரா பூஜாரி, மார்க்கெட்டிங் தலைவர் ராமு சந்திரா, கடைகளின் பொருப்பாளர் குந்தன் குப்தா, இ-காமர்ஸ் தலைவர் அருண் நாய்க்கர் மற்றும் ஆஷிமா அகர்வால் ஆகியோர் மபுசா மாவட்ட நீதிமன்றத்தில் தங்கள் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளதாக குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளரான கார்த்திக் காஷ்யாப் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
முன்னதாக கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி, அம்மாநிலத்தின் காண்டோலிம் பகுதியில் உள்ள பேப் இண்டியா ரெடிமேட் கடையில் சில துணிகளை வாங்கினார். பின்னர் அந்த உடை தனது உடலுக்கு பொருத்தமாக உள்ளதா? என்பதை சரிபார்ப்பதற்காக கடையினுள் உள்ள உடை மாற்றும் அறைக்கு சென்ற போது அந்த அறையை நோக்கியவாறு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, அக்கடையில் பணிபுரிந்த ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அக்கடையின் மேலாளரான சைத்ரலி சாவந்த் என்ற இளம்பெண் மட்டும் விசாரணைக்கும் ஆஜராகவில்லை, போலீசாராலும் அவரை பிடிக்க முடியவில்லை. இதனிடையே தனக்கு முன் ஜாமீன் கேட்டு அவர் மபுசா நகர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சைத்ரலிக்கு மபுவா நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Average Rating