கேரளாவில் ரெயிலில் அடிபட்டு பா.ஜனதா பெண் நிர்வாகி பலியானதை செல்போனில் படம் எடுத்த வாலிபர்கள்!!
கோட்டயம் நகராட்சியின் 19–வது வார்டு பா.ஜனதா கட்சியின் நிர்வாகி லைலா தங்கச்சன் (வயது 47).
இவர் நேற்று தனது வீடு அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது திடீரென அந்த வழியாக கோட்டயத்தில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரெயில் வேகமாக வந்தது. இதை கண்டதும், அதிர்ச்சியான லைலா தங்கச்சன் தண்டவாளத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதனை ரெயில்வே கேட் கீப்பர் தோமஸ் வஸ்தியான் பார்த்து விட்டார். அவர் சிவப்பு கொடி காட்டி ரெயிலை நிறுத்த முயன்றார். அதற்குள் வேகமாக வந்த ரெயில் லைலா தங்கச்சன் மீது மோதி விட்டது. இதில் அவர் உடல் சிதறி பரிதாபமாக பலியானார்.
லைலா தங்கச்சன் தண்டவாளத்தை கடந்தபோது அருகே இரு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ரெயில் வருவதையும், அப்போது லைலா தண்டவாளத்தை கடக்க முயல்வதையும், அவர் மீது ரெயில் மோதி உடல் சிதறுவதையும் தங்கள் செல்போனில் படம் பிடித்தபடி இருந்தனர்.
தூரத்தில் இருந்து இதனை கவனித்த கேட் கீப்பர் தோமஸ் வஸ்தியான், அந்த வாலிபர்களிடம் லைலாவை காப்பாற்றும்படி சத்தம் போட்டபடி ஓடி வந்தார். இருந்தும் அவர்கள் லைலாவை காப்பாற்ற முயற்சிக்காமல் படம் பிடிப்பதிலேயே கவனமாக இருந்தனர். சம்பவம் நடந்த சில விநாடிகளில் அதனை தங்களின் பேஸ் புக்கிலும் பரவ விட்டனர்.
சமூக அக்கறையின்றி, கண் முன்பே ஒருவர் கோரமாக பலியானபோதும், அவரை காப்பாற்ற முயற்சிக்காத வாலிபர்களின் கொடூர செயல் பற்றி கேட் கீப்பர் தோமஸ் வஸ்தியான் கோட்டயம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating