ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து ஆஸ்பத்திரிகளும் இலவசமாக சிகிச்சை வழங்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்!!
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு தொடர்ந்த ஒரு வழக்கை இன்று முடித்துவைத்த உச்ச நீதிமன்றம் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் உயர்தர சிகிச்சையை இலவசமாக வழங்க முன்வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாநில அரசுகள் தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஆசிட் வீச்சு சம்பவம் நடைபெற்றவுடன் பாதிக்கப்பட்டவர் முதன்முதலாக எந்த ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெறுகிறாரோ, அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் ’இவர் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்’ என அவருக்கு ஒரு சான்றிதழ் அல்லது ஆவணத்தை வழங்க வேண்டும்.
அந்த ஆவணத்தை வைத்து நாட்டில் உள்ள எந்த தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியிலும் தனது காயங்களுக்கு அவர் எப்போது வேண்டுமானாலும் சிகிச்சை பெற்றுக் கொள்ள உதவிட வேண்டும். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, சிகிச்சை கட்டணம், அதிக செலவாகும் மறுசீரமைப்பு உள்ளிட்ட அனைத்து வகை உயர் சிகிச்சைகளையும் நாட்டில் உள்ள அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளும் இலவசமாக வழங்கிட வேண்டும்.
இந்த உத்தரவை உடனடியாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில்அனுப்பி வைக்க வேண்டும். தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு இது தொடர்பான அறிவுறுத்தலை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுகாதார துறை அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும் என மதன் பி லோக்குர் மற்றும் யு.யு.லலித் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதி பெஞ்ச் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மனவள கவுன்சலிங்கும் அளிக்கப்பட வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் கோலின் கன்சால்வேஸ் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள இந்த பெஞ்ச் மறுத்து விட்டது.
Average Rating