பிரசவித்த இரண்டே மணி நேரத்தில் பி.ஏ. தேர்வு எழுத ஆஜரான புதுமைப் பெண்!!
உலகில் மிகவும் கொடூரமான வலி எது? என்று யாரை கேட்டாலும் சற்றும் தயங்காமல் பிரசவ வலி என்று சுலபமாக பதில் கூறி விடுவார்கள்.
பதில் வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால், பிரசவ வலி என்பது அவ்வளவு சாதாரணமாக எல்லோராலும் தாங்கிக் கொள்ளக்கூடிய வலி அல்ல என்பது தாய்மார்களுக்குதான் தெரியும். ஒரு மனித உடலால் 45 டெல் (அலகுகள்) வலியைத்தான் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், ஒவ்வொரு பெண்ணும் பிரசவத்தின்போது 57 டெல் வலியை தாங்கிக்கொண்டு ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள்.
அதாவது, இந்த வலியினால் உண்டாகும் வேதனையானது, ஒரே நேரத்தில் நமது உடலில் 20 எலும்புகள் நொறுங்கும் மரண வலிக்கு ஒப்பானது; அதனால்தான், பெற்றெடுத்த தாயை சான்றோர்கள் தெய்வத்தைவிட உயரிய இடத்தில் வைத்து போற்றியுள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த அஞ்சு மீனா என்ற பெண் பிரசவித்த இரண்டே மணி நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து கல்லூரியில் பி.ஏ. தேர்வில் வரலாற்று பரீட்சை எழுதிவிட்டு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு திரும்பிச்சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இரவெல்லாம் பிரசவ வலியால் வேதனைப்பட்டு அதிகாலை 5 மணிக்கு குழந்தையை ஈன்றெடுத்த அஞ்சு மீனா, காலை 7 மணிக்கெல்லாம் கல்லூரி தேர்வு ஹாலில் ஆஜரானார். அவரது நிலையை உணர்ந்துகொண்ட கல்லூரி நிர்வாகம் அஞ்சு மீனா வசதியாக அமர்ந்து தேர்வு எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தந்தது.
இவ்வளவு சிரமப்பட்டு தேர்வுக்கு வர வேண்டுமா? என வாஞ்சையுடன் கேட்ட தோழிகளுக்கு ‘இந்த ஒரு நாளை தவறவிட்டால் என் வாழ்க்கையின் ஒரு வருடம் பாழாகி விடுமே.., அதை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த சிரமம் எனக்கு பெரிதாக தோன்றவில்லை’ என வலியுடன் கலந்த குறுநகையுடன் பதில் அளித்தார், அஞ்சு மீனா.
Average Rating