உத்தரபிரதேசத்தில் பென்சில் திருடியதாக தாக்கப்பட்ட மாணவன் பலி: தலைமை ஆசிரியர் கைது!!
உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டம் ராகிலாமாமு என்ற கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் லலித் குமார். இந்த பள்ளியின் 3-ம் வகுப்பில் 7 வயது சிறுவன் ஒருவன் மற்றும் சிவாராவத் (வயது 10) என்ற 2 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். இந்த நிலையில் அந்த வகுப்பில் உள்ள சக மாணவர்கள் தங்களது பென்சில்கள் மற்றும் ரப்பர்கள் காணாமல் போனதாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து தொலைந்து போன பொருட்களை தேடிய போது அவை புதிதாக சேர்ந்த 2 மாணவர்களிடம் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தலைமை ஆசிரியர் 2 மாணவர்களையும் கண்மூடி தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு சென்ற சிவாராவத் பெற்றோரிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளான், மேலும் ரத்த வாந்தியும் எடுத்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Average Rating