வாணியம்பாடியில் ஆசிரியை அடித்ததாக கூறி 23 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி!!
வாணியம்பாடி புதூரில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த கல்வியாண்டின் கடைசிநாளான நேற்று 6–ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ– மாணவிகள் பள்ளியில் கேக் வெட்டியும், தாங்கள் கொண்டு வந்த உணவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறியும் மகிழ்ச்சி தெரிவித்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.
இதைக்கண்ட அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை ஒருவர் மாணவர்களை கண்டித்ததோடு மட்டுமல்லாது ஒவ்வொருவராக அழைத்து பிரம்பால் தாக்கியுள்ளார்.
இதில் விக்ரம், அன்பழகன், வசந்தகுமார், அய்யப்பன், ரிசி, இலக்கியா, ராஜேஷ், அருள்மொழி உள்பட 23 மாணவ, மாணவிகளுக்கு கை, முதுகில் காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு மாணவ, மாணவிகளை தாக்கிய ஆசிரியையை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து 23 மாணவர்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
மாணவ, மாணவிகளின் பெற்றோர் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டதால் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, சப்–இன்ஸ்பெக்டர் மலர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவர்களில் 10 பேர் நேற்று வீடு திரும்பினர். 13 பேருக்கு இன்று 2–வது நாளாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் கல்விதுறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
Average Rating