விண்வெளி ஓடம் வெற்றி: “நாசா’ மகிழ்ச்சி
அமெரிக்கா செவ்வாய்க்கிழமை ஏவிய விண்வெளி ஓடம் டிஸ்கவரி நன்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை “நாசா’ விஞ்ஞானிகள் திருப்தியுடன் தெரிவித்தனர். விண்வெளி ஓடம் ஏவப்பட்டவுடன் அதிலிருந்து சிறிதளவு நுரைப்பஞ்சு பிய்ந்து வெளியே வந்து விழுந்தது. இதே போலத்தான் கொலம்பியா விண்வெளி ஓடத்தில், ஓடம் பூமிக்குத் திரும்பியபோது நுரைப்பஞ்சு வெளியேறி ஓடமே தீப்பிடித்து எரிந்து விழுந்தது.
அதிலிருந்தவர்கள் அனைவரும் கருகி அடையாளம் காண முடியாதபடிக்கு உயிரிழந்தனர். ஆனால் அதன் பிறகு ஏவப்பட்ட விண்வெளி ஓடத்திலும் இதே பிரச்சினை ஏற்பட்டது. அப்படியும் விபத்து இல்லாமல் அதில் தரை இறங்க முடிந்தது. எனவே நாசா அதிகாரிகள் இது குறித்துக் கவலை அடையவில்லை. இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கும் திறமையும் அனுபவமும் இருக்கிறது என்று தன்னம்பிக்கையுடன் அவர்கள் தெரிவித்தனர்.
விண்வெளி ஓடத்தின் இறக்கைகள், மூக்குப் பகுதி ஆகியவற்றை லேசர் காமிரா உதவியுடன் படம் பிடித்து, அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.